ஆழ்வாரும் ஆண்டளக்கும் ஐயனும்!

ஆன்மிக கட்டுரைகள்
1"/>

இந்த மந்திர மரக்கால் மட்டும் எல்லா ஆபிசிலும்ம் இருந்து, அதில் அளந்து தான் சம்பளம் கொடுப்போம் என்றால், நம் நாடு எந்த அளவுக்கு முன்னேறி விடும் என்று பாருங்கள்.

உழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்!

திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் பணியில் ஈடுபட்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர்.

கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்துகொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்கிற எண்ணத்துடனும், சிலர் அதை வெறும் கூலி வேலையாகவும், சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். ஒரு மாபெரும் பணியில் இதெல்லாம் சகஜம் தானே… அவரவர்க்கு அவரவர் மனசாட்சி தானே நீதிபதி?

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது.

செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். கணக்குப் பிள்ளையை அழைத்து பேசினார். “இன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை” என்றார் அவர். அவ்வளவு தான் திருமங்கையாழ்வார் தவித்துப் போனார்.

“என்ன செய்வேன்? இந்த தொழிலார்களுக்கு என்ன பதில் சொல்வேன்? இவர்கள் எல்லாம் பிள்ளைகுட்டிக்காரர்களாயிற்றே… ரங்கா இப்படி ஒரு பழிக்கு என்னை ஆளாக்கிவிட்டாயே….” என்று அரங்கனிடம் உருகினார்.

“இன்று ஒரு நாள் சமாளித்துவிடுங்கள். பணத்திற்கு பதில் ஏதேனும் பொருள் கொடுத்து அனுப்பமுடியுமா பாருங்கள். நாளைக்கு ஏதாவது செய்யலாம்” என்று கூறி கணக்குப் பிள்ளையை அனுப்பிவிட்டு தனியே யோசிக்கிறார். நேரம் தான் சென்றதே தவிர ஒரு உபாயமும் தோன்றவில்லை.

“நடப்பது அவன் பணி. அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டியது அவனிடத்தில் உள்ளது… நாம் எதற்கு கவலைப்படுவானேன்…” என்று மனதை தேற்றிக்கொண்டார்.

கோவிலுக்கு சென்று அரங்கனை வணங்கி தனது மனக்குறையை எடுத்து சொல்லி, “உன் ஆலயத் திருப்பணியை நீ தான் மேற்கொண்டு தொடர உதவவேண்டும். நீ அறியாதது எதுவும் இல்லை” என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அரங்கன், “அன்பனே கவலை வேண்டாம். நாளை கொள்ளிடக் கரைக்கு வாருங்கள். கொள்ளும் அளவிற்கு பொருள் தருகிறேன்” என்று கூறிவிட்டு மறைந்தான்.

மறுநாள் எழுந்ததும் அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் திசையை நோக்கி வணங்கியவர் நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டு கொள்ளிடக்கரைக்கு விரைந்தார்.

ஆனால் கொள்ளிடக்கரையில் யாரும் இல்லை. நிமிடங்கள் நாழிகையானது… நாழிகைகள் கரைந்து நாளானது. யாரும் வரவில்லை. ஒருவேளை அரங்கன் கனவில் வந்தது பிரம்மையோ… அரங்கன் வந்து எதுவும் சொல்லவில்லையோ… எப்போதும் கோவில் கட்டும் நினைவிலேயே இருப்பதால் நமக்கு தான் அப்படி ஒரு கனவு வந்ததோ… இவ்வாறாக சிந்தித்துக்கொண்டிருந்தார் ஆழ்வார்.

அரங்கன் வருவான் வருவான் என்று நாள் முழுக்க காத்திருந்தது தான் மிச்சம். ஒரு ஈ, காக்கா குருவி கூட வரவில்லை

சரி புறப்படலாம்… என்று அவர் தீர்மானித்த நேரம், தொலைவில் யாரோ வருவது போலிருந்தது.

யாரோ ஒருவர் பார்க்க ஒரு வணிகர் போல இருந்தார். தலையில் தலைப்பாகை. கையில் ஒரு சுவாதியும் எழுத்தாணியும். இன்னொரு கையில் மரக்காலுடன் வந்துகொண்டிருந்தார்.

“ஐயா… நான் உங்களை பார்க்க தான் வந்துகொண்டிருக்கிறேன். இருங்கள் போய்விடாதீர்கள்…” என்று சற்று தொலைவில் வரும்போது ஆழ்வாரின் காதுகளில் விழுமாறு சொன்னான்.

ஆழ்வாருக்கு ஆச்சரியம். “என்னைப் பார்க்கவா?”

“ஆமாம் ஐயா… உங்களுக்கு ஏதோ பொருள் தேவையாமே. மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்று ரங்கநாதர் என்னை இங்கே அனுப்பிவைத்தார்.”

“ஓ… அப்படியா… மிக்க மகிழ்ச்சி ஐயா…” என்று கூறிவிட்டு அவரை சற்று ஆராய்வது போல பார்த்தார்… பின்னர் தொலைவில் அவர் வந்த திசையில் பார்த்தார்.

என்ன ஐயா…?”

“பொருள் தர வந்திருப்பதாக சொல்கிறீர்கள். உங்களிடம் இந்த காலி மரக்காலை தவிர வேறு எதுவும் இல்லை. அதான் யாரவது பின்னால் வந்துகொண்டிருக்கிறார்களா என்று பார்த்தேன்”

“ஐயா… இதோ இருக்கிறதே இந்த மரக்கால் தான் அந்தப் பணியை செய்யப்போகிறது”

“என்ன இந்த காலி மரக்காலா?’

“ஐயா இது ஏதோ நெல் அளக்கும் மரக்கால் என்று நினைத்துவிட்டீர்கள் போல. இது பொன் அளக்கும் மரக்கால் மந்திர மரக்கால் தெரியுமா??”

“என்ன பொன் அளக்கும் மந்திர மரக்காலா?” ஆழ்வார் வியப்போடு கேட்டார்.

“ஆமாம் ஐயா… அரங்கன் திருப்பெயரை பக்தியுடன் உச்ச்சரித்து இதில் மண்ணை போட்டாலும் அது பொன்னாகிவிடும்…” என்று கூறி சிரித்தான் அந்த வணிகன்.

“அப்படியானால் வாருங்கள் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்திற்கே செல்வோம்” என்று கூறி வணிகனை அழைத்துக்கொண்டு திருவரங்கம் விரைந்தார் திருமங்கையாழ்வார்.

இவர்கள் சென்ற நேரம் கூலி கொடுக்கும் நேரம். தொழிலாளர்கள் அனைவரும் கூலி வாங்கிக்கொண்டு தத்தங்கள் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். கணக்குப்பிள்ளையோ கையை பிசைந்துகொண்டிருந்தார்.

வணிகரை பார்த்து “ஐயா.. ரக்காலில் மண்ணை போட்டு அளக்கலாமா? நேரமாகிறது. தொழிலார்களுக்கு கூலி கொடுக்கவேண்டும்.”

“இதோ உடனே. ஆனால் நான் சொன்னது நினைவிருக்கிறது அல்லவா? இது மந்திர மரக்கால். யார் உண்மையில் உழைத்தார்களோ அவர்களுக்கு தான் இதில் பொன் கிடைக்கும். மற்றவர்களுக்கு மண் தான் கிடைக்கும். பொன் கிடைக்காது.”

ஒவ்வொருவருமாக வரிசையாக வந்து நின்றனர். வணிகர் மண்ணை அள்ளி மரக்காலில் போட என்ன அதிசயம்… அவரவர் உழைப்புக்கு தகுந்தவாறு மண் அனைத்தும் பொன்னாக மாறியது. பணி செய்யாமல் ஏய்த்துவந்தவர்களுக்கு மண் தான் கிடைத்தது.

அவர்கள் திருதிருவென விழித்தனர்.

“ம்…மரக்கால் பொய் சொல்லாது… போங்கள் இங்கே இருந்து” என்று அவர்களை விரட்டினார் திருமங்கையாழ்வார்.

மண் கிடைத்தவர்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் கூடிப் பேசி “ஆழ்வார் செய்தது சரில்லை. உழைப்பை வாங்கிவிட்டு கூலி கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அதற்கு இந்த வணிகன் வேறு உடந்தை. அந்த வணிகன் நம்மை மோசம் செய்துவிட்டான்” என்று குமுறினர்.

“நீ மந்திரவாதி தானே… இரு இரு உனக்கு நாங்கள் பாடம் புகட்டுகிறோம்” என்று அவனை அடிக்கப் பாய்ந்தனர்.

ஆனால் அந்த வணிகனோ அவர்கள் பிடியில் அகப்படாமல் ஓட்டமெடுத்தான்.

அனைவரும் வணிகரை துரத்த, திருமங்கையாழ்வார் குதிரை மீது ஏறி அவ்வணிகரை பின் தொடர்ந்தார்.

வணிகர் அப்படி இப்படி போக்குகாட்டிவிட்டு ஒரு இடத்தில் வந்து அமர்ந்தார்.

திருமங்கையாழ்வார் அவரிடம் “நீங்கள் யார்? ஏன் இப்படி எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?” என்று கேட்க, அடுத்த நொடி ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணனாக காட்சி தந்தார். அந்த இடமே ஆதனூர் என்னும் தலம். 108 திவ்யதேசத்தில் இது 11 வது தலம்.

தன்னை காக்கவந்து பொன் தந்து படியளந்தது சாட்சாத் அரங்கனே என்பதை அறிந்த திருமங்கியஆழ்வார் கண்ணீர் மல்க அரங்கனின் துதித்தார். பாமாலைகள் பாடினார்.

பின்னர் ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதி திருமங்கையாழ்வாருக்கு உபதேசமும் செய்தார்.

வணிகனாக வந்தது சாட்சாத் அரங்கன் என்பதை அறிந்த ஏனையவரும் மனம்திருந்தினர். ஆழ்வார் அவர்களிடம் “திருக்கோவிலில் பணி செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. எனவே அதை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதே அரங்கன் இந்த விளையாட்டை நிகழ்த்தினார். இனியாவது சிரத்தையுடன் பணி செய்யுங்கள்” என்றார்.

அவர்களும் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு ஆழ்வார் கால்களில் விழுந்தனர்.

இன்றும் நீங்கள் ஆதனூர் (சுவாமிமலை அருகே) சென்றால் சுவாமி மரக்காலை தலையில் வைத்துப் சயனித்திருப்பார். இடது கையில் எழுத்தாணி, ஏடு இருக்கும். இங்கே சுவாமிக்கு என்ன பெயர் தெரியுமா? படியளக்கும் பெருமாள்!

படியளக்கும் பெருமாள் நம் அனைவருக்கும் படியளக்க வேண்டும் என்று பிரார்த்திப்போமாக.

நம்ம திருமங்கையாழ்வார் கூட அவருடைய வழக்கமான பத்தை விட்டுட்டுப் போறபோக்கில் அங்கொன்னும் இங்கொன்னுமா ஒரு வார்த்தை இவரைப் பற்றிப் பாடிட்டுப் போயிருக்கார், பாருங்க.

முன்னவனை மூழிக் களத்து விளக்கினை,
அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,
நென்னலை யின்றினை நாளையை, – நீர்மலைமேல் ……

இன்னொரு இடத்தில்…..

இடரான வாக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென்னார
மலன் ஆதனூர் எந்தை யடியார்

  • நாராயணன் சேஷாத்ரி

Leave a Reply