682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று பம்பை நதியில் கோலாகலமாக நடைபெற்றது.பம்பையில் இருந்து சுவாமி சன்னிதானம் வந்ததும் இரவு கொடி இறக்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி, படிபூஜை நடைபெற்று வந்தது. 9-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது.
இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பம்பை ஆற்றில் ஐய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது.
இதனையொட்டி காலை 8 மணிக்கு ஐய்யப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் காலை 11.30 மணிக்கு பம்பை வந்து சேர்ந்தது.திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் பம்பை நதிக்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆராட்டு கடவில் ஐய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. ஆராட்டு சடங்குகளை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றினார். களபம், மஞ்சள் பூசி ஆராட்டு கடவில் 3 முறை மூழ்கி ஐய்யப்பனுக்கு ஆராட்டு சடங்கு நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து புத்தாடை அணிவித்து அய்யப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக அய்யப்ப விக்ரகம் பம்பை கணபதி கோவிலில் வைக்கப்பட்டது. மாலையில் ஐய்யப்ப விக்ரகம் ஊர்வலமாக மீண்டும் சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அத்துடன் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது. தொடர்ந்து அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.
பிறகு விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.