
தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்
தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,
சாலமேல் வருக ருமமும்
தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்
தானாதி பதியா குவான்;
மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,
வாழ்குடி படைத்தி றமையும்,
மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்
வளமான மதிமந் திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,
தோலாத வெற்றியும் திடமான சித்தியுள
சூரனே சேனா திபன்
அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தாயினும்
நல்லருள் புரியும் மலைமகளை யிடப்பாகத்திற் கொண்டவனே!,
தூயவனே!, தன் அரசனுடைய ஆற்றலும் மாற்றரசர் நினைவும்
நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, சிறந்த அறிவும் சூழ்ச்சியும்
பொருந்தியவன் தானைத்தலைவன் எனப்படுவான், அரசர்களின் கருத்தையும், காலத்தையும், இடத்தையும், வாழ்கின்ற
குடிபடைகளின் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையும், தெரிந்தவன் தேர்ச்சிபெற்ற அறிவுடைய அமைச்சனாவான்,
செறிவான படைகளின் இயல்பும், யானை குதிரைகளின் தேர்ச்சியும், சூழந்துள்ள மாற்றலர் செய்யும் சூழ்ச்சியும்,
பின்வாங்காத வெற்றியும், திடமான சித்தி(யும்) உறுதியான சித்தியும்,
உடைய வீரனே படைத்தலைவன் ஆவான்.