திருப்புகழ் கதைகள்: சமணர் கதை!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0ae9ae0aeaee0aea3e0aeb0.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 197
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

குறித்தமணி – பழநி
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?

இந்த வரலாற்றில் இடம் பெறும் பாண்டிய மன்னர், நின்றசீர் நெடுமாற நாயனார் என்பவர் ஆவார். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

அரிகேசரி என்ற இயற்பெயர் கொண்ட இவர் கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவர் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டார்.

கி.பி. 640ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றார். திருவிளையாடல் புராணத்தில் இவர் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தர் வந்தபொழுது தன்னையும் அறியாமல் தன் தலைப்பக்கமாக இருந்த பொற்றவிசில் அவரை அமருமாறு கையெடுத்துக் காட்டினார். அப்பொழுது ஆரவாரித்த சமணரை அடங்குமாறு சொல்லி தம் சுரநோயைத் தீர்ப்பதுவே இருசாராருக்குமாகிய போட்டி என உரைத்தார். சம்பந்தர் திருப்பதிகம் பாடி திருநீறு தடவியபோது அவர்தம் வலப்பக்கம், அமுத இனிமையும் சுவர்க்க இன்பமும் போல சுகம் செய்தது. அப்பதிகத்தின் முதல் பாடல்

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

என்பதாகும். மற்றைய பாகம், நரகத் துன்பமும் கொடுவிடமும் போல வருத்தியது. எனவே மன்னன் சமணரை “வாதில் தோற்றீர்” எனக் கூறிச் சம்பந்தரை மனதார வணங்கி வருத்தம் முற்றும் தீர்க்கும்படி வேண்டினார். முற்றும் தீர்ந்ததும் முடிமிசைக் கைகுவித்த கையராய் “ஞானசம்பந்தர் பாதம் அடைந்து உய்ந்தேன்” எனப் போற்றினார். சமணரை “இப்போது சொல்லுங்கள் என்னவாது உமக்கு” என ஏளனஞ்செய்தார்.

ஏளனக் குறிப்பறியாத சமணர் அதனை ஒரு வினாவெனக் கொண்டு அனல் வாதத்திற்கும் எழுந்தனர். அனல் வாதம் எனப்படும் நெருப்பில் ஏடுகளை இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. இந்த அனல் வாதத்தில் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகமான “போகமார்த்த பூன்முலையாள்” என்று தொடங்கும் பதிக ஏட்டை அனலில் இட்டார். அது எரியாமல் இருந்ததால் அப்பதிகம் “பச்சைப் பதிகம்” என்ற சிறப்புடையது.

அதனையடுத்து புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சமணர்கள் அழைத்தார்கள். இந்த வாதத்திலும் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் என்றார்கள். அதனையடுத்து நிகழ்ந்த புனல் வாதத்தில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்மந்தரின் ஏடு நீரின் எதிர்திசையில் மிதந்தது வந்தது. திருஞான சம்மந்தர் வென்றார். நீரில் இடுவதற்கு

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

என்று தொடங்கும் ஒரு பாதிகத்தைப் பாடினார். வேந்தனும் ஓங்குக என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்து, கூன்பாண்டியன், நின்ற சீர் நெடுமாறன் ஆயினார். இதையடுத்து எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப் பட்டனர்.

இந்த சமணர்கள் கழுவேற்றப்பட்ட சம்பவம் இந்து மதம் ஒரு கொடூரமான மதம் என்று சித்திரிக்கப்படும் வகையில் பலரால் கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கு சரியான பதிலை திரு பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் தந்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் பரமேச்வர விஷ்ணுக் கிருஹம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலில் இருக்கும் சிற்பங்களில் முக்கியமான ஒன்று நந்திவர்ம பல்லவனின் மேற்பார்வையில் இருவர் (ஒருவர் தலைகீழாகக் கழுவேற்றப் படுகிறார்) கழுவேற்றப்படுவதைக் காட்டுகிறது. கழுவேற்றத்தைப் பற்றிய முதல் தமிழ்ப்படைப்பு இதுவாகத்தான் இருக்கும்.

மற்றொரு சம்பவம் எட்டாயிரம் சமணர்கள் மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள் என்பதாகும். இவை தமிழில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இந்து மதத்தின் சாவுமணி எங்களால்தான் அடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தோடு எழுதுபவர்களிடமிருந்து தமிழின் முக்கியமான படைப்பாளிகள் வரை இந்த சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

திருப்புகழ் கதைகள்: சமணர் கதை! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply