e0af8d-e0ae86e0aeb0e0af8de0aeaf.jpg" style="display: block; margin: 1em auto">
![திருப்புகழ் கதைகள்: ஆர்யபட்டரின் சிறப்பான கண்டுபிடிப்புகள்! 4 thiruppugazh stories](https://i0.wp.com/www.deivatamil.com/wp-content/uploads/2021/09/e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d-e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d-e0ae86e0aeb0e0af8de0aeaf-1.jpg?resize=300%2C169&ssl=1)
![திருப்புகழ் கதைகள்: ஆர்யபட்டரின் சிறப்பான கண்டுபிடிப்புகள்! 2 thiruppugazh stories](https://i0.wp.com/www.deivatamil.com/wp-content/uploads/2021/09/e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d-e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d-e0ae86e0aeb0e0af8de0aeaf-2.jpg?resize=640%2C360&ssl=1)
திருப்புகழ்க் கதைகள் 146
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அதல விதல முதல் – பழநி
ஆரிய பட்டரின் சிறப்பான கண்டுபிடிப்புகள்
ஆரியபட்டரின் மேலும் சில சிறப்பான கண்டுபிடிப்புக்கள்
1.பூமி கோள வடிவமானது. பூமியின் விட்டம் 1,050 யோஜனை (ஒரு யோஜனை= 13.6 கி.மீ.). பூமியின் சுற்றளவு 44,860 கி.மீ. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அவ்வாறு ஒரு முறை பூமி சுற்ற 23 மணி, 56 நிமிடம், 4.1 விநாடி ஆகிறது (இதனை அவர் நாழிகையில் குறிப்பிடுகிறார்). பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதால்தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன.
2.வானிலுள்ள கோள்கள் அனைத்தும் கோள வடிவிலானவை. சூரியன், சந்திரனும் கோள வடிவிலானவை. சூரியனின் ஒளியையே சந்திரனும் கோள்களும் பிரதிபலிக்கின்றன. புதன், வெள்ளி, செவ்வாய், பூமி, சந்திரன், சூரியன், வியாழன், சனி என்ற வரிசையில் வானில் நீள்வட்டப்பாதையில் கோள்கள் சுற்றுகின்றன. (இதில் அவர் சூரியனையும் ஒரு கோளாகக் கொண்டிருப்பது மட்டுமே தவறு. ஆனால் கிரேக்க அறிஞர்கள் பூமி தட்டையானது என்று சொல்லி வந்தபோது அதன் உண்மையான வடிவத்தையும், சூரியக் குடும்பத்தில் கோள்களின் வரிசையையும் துல்லியமாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது).
3.வான மண்டலத்தில் பூமி ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலமே ஆண்டு. அது 365.8586805 நாள்கள். அதாவது, 365 நாள்கள், 6 மணி, 12 நிமிடம், 30 விநாடிகள். (நவீனக் கணக்கீட்டில் இதன் பிழை 3 நிமிடம், 20 விநாடிகள் மட்டுமே)
4.வட்டத்தின் சுற்றளவையும் பரப்பளவையும் கண்டறியப் பயன்படும் “பை’ (pi) என்ற மாறிலியின் (22/7 = 3.1416) மதிப்பை முதன்முதலில் கண்டறிந்தவர் ஆரியபட்டரே. அதற்கான சூத்திரத்தையும் அவர் அளித்திருக்கிறார்.
5.சந்திர கிரஹணம் பூமியின் நிழலாலும், சூரிய கிரஹணம் இடையே புகும் சந்திரனாலும் ஏற்படுகின்றன என்பதை தெளிவாக விளக்கினார். (ராகு, கேது).
![திருப்புகழ் கதைகள்: ஆர்யபட்டரின் சிறப்பான கண்டுபிடிப்புகள்! 3 aryabhatta](https://i0.wp.com/www.deivatamil.com/wp-content/uploads/2021/09/e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d-e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d-e0ae86e0aeb0e0af8de0aeaf-3.jpg?resize=640%2C493&ssl=1)
6.பாம்புகள் சந்திரனை விழுங்குகின்றன என்ற நம்பிக்கையை முதலில் மறுத்தவர் ஆரியபட்டரே).
7.வட்டத்தின் சுற்றளவை அறிய அதன் விட்டத்தை மாறிலியால் (22/7 ல ஈ) பெருக்க வேண்டும். முக்கோணத்தின் பரப்பளவை அறிய அதன் அடிப்பக்க நீளத்தை, செங்குத்து உயரத்தால் பெருக்கி, இரண்டால் வகுக்க வேண்டும் (1/2 ba) என்று வாய்பாட்டை உருவாக்கியவர். கோளத்தின் கண அளவை அறியும் சூத்திரத்தையும் அவர் அளித்துள்ளார்.
8.சைன் அட்டவணையை முதலில் உருவாக்கியவர் ஆரியபட்டரே. அவர், ஜ்ய (சைன்), கோஜ்ய (கோசைன்), உத்கிரமஜ்ய (வெர்சைன்), ஒத்கிரமஜ்ய (இன்வர்சைன்) ஆகியவை குறித்து விளக்கியுள்ளார். அது மட்டுமல்லாது, பூஜ்ஜியம் பாகை முதல் 90 பாகை வரை 3.75 பாகை இடைவெளியில் ஜ்ய- சைன் (Sin), உத்கிரமஜ்ய- வெர்சைன் (Versin) ஆகியவற்றின் மதிப்புகளை 4 தசமஸ்தானங்களில் பட்டியலாகவும் வழங்கியுள்ளார் பட்டர். இதுவே நவீன திரிகோணவியலின் அடிப்படை.
9.வர்க்கத் தொடர்கள், கணத்தொடர்களின் கூட்டுத்தொகையை அறிவதற்கான முறையையும் பட்டர் விளக்கியுள்ளார். மூன்று எண்களிலிருந்து (a, b, c) அறிய வராத நான்காவது குறியீட்டு எண்ணின் (x) மதிப்பைக் கணக்கிடும் மூன்று எண் விதியையும் அவர் உருவாக்கினார். இவை பின்னாளில் இயற்கணிதம் எனப்படும் அல்ஜீப்ராவாக வளர்ந்தன.
10.வலமிருந்து கடைசி எண் ஒன்று, இரண்டாவது பத்து, மூன்றாவது நூறு, நான்காவது ஆயிரம் என்று வரும் எண்களின் இடமதிப்பு குறியீட்டு முறையை (Place Value System) அவர் விளக்கியுள்ளார்.
11.பூஜ்ஜியம் பற்றிக் குறிப்பிடாவிட்டாலும் அதன் பயன்பாட்டை ஆரியபட்டீயத்தில் பல இடங்களில் அவர் வெளிப்படுத்துகிறார்.
ஆரியபட்டர் மேற்கண்ட கண்டுபிடிப்புகளை 1,500 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தியிருக்கிறார். எந்த நவீன வசதியும் இல்லாத காலத்தில், தனது நுண்ணறிவை மட்டுமே பயன்படுத்தி இந்த மகத்தான உண்மைகளை அவர் நூலாக்கியுள்ளார். தனது கண்டுபிடிப்புகளை நிரூபிக்க சக்ர யந்திரம், சங்கு யந்திரம், சாயா யந்திரம், தனுர் யந்திரம், சாத்ர யந்திரம், யஷ்டி யந்திரம் ஆகியவற்றையும் அவர் வடிவமைத்தார். காலக் கணக்கீட்டுக்காக நீர்க் கடிகாரத்தையும் அவர் உருவாக்கினார்.
அவர் உருவாக்கிய காலப் பகுப்பு அட்டவணைகளே பின்னாளில் நாள்காட்டியாக உருவெடுத்தது. இரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் ஆரியபட்டரின் நாள்காட்டியை அடிப்படையாகக் கொண்டே ஜலாலி நாள்காட்டி (Jalali Calendar) கடைப்பிடிக்கப்படுகிறது.
கணிதம், திரிகோணவியல், வானியல், காலப் பகுப்பியல் உள்ளிட்ட துறைகளில் நவீன விஞ்ஞானிகளுக்கு மூலவராக ஆரியபட்டர் திகழ்கிறார்.
எனவேதான், 1975இல் இஸ்ரோ விண்ணில் செலுத்திய முதல் செயற்கைக்கோளுக்கு “ஆரியபட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில் 2010 முதல் பிகாரில் ஆரியபட்டா அறிவு பல்கலைக்கழகம் செயல்படுகிறது. நைனிடாலில் உள்ள வானாய்வகம் (ARIOS) அவரது பெயருடன் இயங்குகிறது.
திருப்புகழ் கதைகள்: ஆர்யபட்டரின் சிறப்பான கண்டுபிடிப்புகள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.