
கற்பு மேம்பாடு
தன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்
தனக்கிணங் காத நிறையாள்,
தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்
சாபம் கொடுத்த செயலாள்,
மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனது
மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,
மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடி
வாள்மாலை யான கனிவாள்,நன்னதி படிந்திடுவ தென்னஆர் அழல்மூழ்கி
நாயகனை மேவு தயவாள்,
நானிலம் புகழ்சாலி, பேர்பெறு நளாயினி,
நளினமலர் மேல்வை தேகி
அன்னமென வருசந்த்ர மதிதுரோ பதையென்பர்
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
முதல்வனே!, அருமை தேவனே!, தன்னுடைய கணவனின் வடிவத்துடன் தன்னைக் கூட வந்தவனுக்குச் சம்மதியாத கற்புடையாள் உலகம் புகழும் அருந்ததி,
கதிரவன் தோன்றாமலும் இரவு கழியாமலும் சாபம் கொடுத்த செய்கையினாள் புகழ்பெற்ற நளாயினி, பொருந்தி வளர்ந்த தீயிற்புகுந்து உலகம் அறியுமாறு தன்கணவனை அடைந்த அன்பினாள் தாமரை மலர்மேல் இருக்கும்
இலக்குமியின் அம்சமான சீதை, மகனைத்
தீயிலிட வந்த(போது) தன் கணவன் வெட்டிய கூரிய வாள் (மலர்)
மாலையான கனிவுடையவள் அன்னம் போன்ற நடையையுடைய சந்திரமதி,
நல்ல ஆற்றிலே மூழ்குவதுபோல நிறைந்த தீயிலே முழுகித்தன் கணவனைக் கூடும் அன்புடையாள் திரௌபதி, என்று
(அறிஞர்) கூறுவர்.