நாலாம் திருமொழி – சென்னியோங்கு
(எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
463 :
சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு
தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2) 1.
464:
பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2.
465:
எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே.
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்?
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. 3.
466:
கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. 4.
467:
பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5.
468:
உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ.
என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? 6.
469:
பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7.
470:
அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8.
471:
பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ.
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2) 9.
472:
தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி.
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2) 10.
473:
வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2) 11.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்