பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்து

பெரியாழ்வார்

இரண்டாம் திருமொழி – நெய்க்குடத்தை

(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே

விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

443 :

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்

கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்

மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்

பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 1.

 

444:

சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி

வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார்

முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்

பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. 2.

 

445:

வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி

கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி

எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப்

பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3.

 

446:

மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்

இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்

சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்

பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 4.

 

447:

மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே

பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி

மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்.

பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5.

 

448:

உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்

பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்

அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர்

பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6.

 

449:

கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி

அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை

வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி

பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 7.

 

450:

ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே

பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து

போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்

பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8.

 

451:

உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே.

அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே.

இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்.

பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். (2) 9.

 

452:

அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்

அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து

பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை

பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. (2) 10.

Leave a Reply